சென்னை அருகே திருவேற்காட்டில் பாஜக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவேற்காடு அருகே உள்ள கீழ அயனப்பாக்கம் வானகரம் -அம்பத்தூர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் பரமானந்தம் (48). இவர் பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மாவட்ட எஸ்.சி. அணிச் செயலராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் பரமானந்தம் புதன்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்படும் சத்தத்தைக் கேட்டு பரமானந்தம் எழுந்தார். உடனே அவர், வீட்டின் வரவேற்பு அறைக்கு வந்தார்.
அப்போது அங்கு இரு மர்ம நபர்கள், வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பெட்ரோல் குண்டை வீசினர். இதில் அங்கிருந்த ஷோபா தீப்பிடித்து எரிந்தது. மேலும் அங்கு தீ வேகமாக பரவத் தொடங்கியது. உடனே பரமானந்தம் தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, வெளியே ஓடினார்.
பரமானந்தம் குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு, அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர். மேலும் அந்த நபர்கள், பரமானந்தம் வீட்டின் முன் இருந்த மூங்கிலான பாஜக கொடி கம்பத்தை தீயிட்டு எரித்திருப்பதும், தெரு முனையில் இருந்த கட்சியின் இரும்புக் கம்பியிலான கொடிக் கம்பத்தை உடைத்து சாய்த்திருப்பதும் பரமானந்தத்துக்கு தெரியவந்தது. இதுகுறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் பரமானந்தம் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.