மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைந்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் உள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் கே. நாராயணா.
மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து செப்.21 முதல் 27-ஆம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசார நடைபயணம் மேற்கொள்கின்றனர். இந்த பிரசாரப் பயணம் காரைக்காலில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற கே. நாராயணா செய்தியாளர்களிடம் கூறியது:
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில், பெரு நிறுவனங்களே சலுகைகள் பெற்றுள்ளன. ரூ.13.50 லட்சம் கோடி மத்திய அரசு மூலம் இவர்கள் கடன் பெற்றுள்ளனர்.
விவசாயிகள் கடன் தள்ளுபடியோ, சாதாரண மக்களின் மேம்பாட்டுக்கோ எந்த சலுகையும் மத்திய அரசு அளிக்கவில்லை. ஒரே நாடு, ஒரே வரி என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டியும் பெரு நிறுவனங்களுக்கே சாதகமாக உள்ளது.
பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவங்களைப்போன்று 3, 4 சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன. இவற்றில் மதவாத சக்திகளின் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவருகிறது. மத்தியில் பாஜக அரசு, இதுபோன்ற செயல்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்துத்துவா கொள்கையால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, 2019-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. இதைத் தடுக்கும் பொறுப்பு இடதுசாரி உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் உள்ளது.
தமிழகத்திலும், புதுவையிலும் ஆளுநரை பயன்படுத்தி மத்திய அரசு குறுக்கு வழியில் ஆட்சி செய்துவருகிறது. தமிழகத்தில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில், மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார் கே. நாராயணா.
பேட்டியின்போது மாநில துணை செயலர் ராமமூர்த்தி உடனிருந்தார்.