வேலைவாய்ப்பற்றோருக்கான அரசின் உதவித்தொகை பெறும் இளைஞர்கள் தங்களது வங்கிக்கணக்கு, வேலைவாய்ப்புப்பதிவு அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட தகவல்:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு விதிமுறைகளின்படி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேற்காணும் உதவித்தொகையை இவ்வலுவலகம் மூலம் பெற்றுவரும் பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கிலும், தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டையிலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவித்தொகை பெற்றுவரும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் அட்டை, வங்கிப்புத்தகம், மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பக அட்டையுடன் அலுவலக வேலை நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விவரங்களை அளிக்க வேண்டும்.