ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் கொடுத்த புகார் பற்றி விசாரிக்க வேண்டிய பொறுப்பு சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு இருக்கிறது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். இப்படிச் செய்துள்ளதன் மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி தன் அரசியல் சட்டக் கடமையிலிருந்து விலகிச் செல்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு முதல்வரே வாக்காளருக்குப் பணம் கொடுத்ததாக ஆர்.கே. நகரில்தான் புகார் எழுந்தது. ஆனால், இன்றுவரை முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் நீதிமன்றத்தில் காவல்துறை ஆணையர் விசாரிப்பார் என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. முதல்வர் தானாக பதவியில் இருந்து விலகி, சுதந்திரமான விசாரணைக்கு வழி விடவேண்டும். இல்லையென்றால், ரூ.89 கோடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்ய வேண்டும்.
அன்புமணி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இது ஜனநாயக விரோத நிலைப்பாடாகும். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல் ஊழல்களில் மிக மோசமானது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஊழல்தான். எடப்பாடி தலைமையிலான அரசு பதவியேற்றிருந்த நேரத்தில், அதற்கு காரணமாக தினகரனை எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி இறைத்தனர். இந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் முன்னேற்றத்தை, காவல்துறை நடவடிக்கைகளில் குறுக்கிடாமல், தேர்தல் ஆணையம் கண்காணித்து வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து ஊழல்களுக்கும் தாய் தேர்தல் ஊழல் தான். எனவே, அந்த ஊழல் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக ஆர்.கே.நகர் தொகுதி முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.