புதுதில்லி: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அதிமுக மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்னும் சற்று நேரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்ததை அடுத்து முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொறுப்பு ஆளுநரிடம் கடிதம் அளித்தனர், இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என கூறி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தும் மனு அளித்தனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனர். திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனிடையே கட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டதாக கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் திங்கள்கிழமை (செப்.18) உத்தரவிட்டார். 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வெற்றிவேல் உள்பட 18 பேர் தரப்பில் தகுதி நீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேரம் கேட்டுள்ளதாகவும், அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.