இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி கவுண்டன்பாளையம் வழுதாவூர் சாலையில் பிரசார நடைபயணத்தை இன்று தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தொடங்கி வைத்தார்.
பனாமா பேப்பரில் வெளியாகி உள்ளவாறு பணத்தை பதுக்கி உள்ள 500 பேரின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும், பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கியுள்ள பல லட்சம் கோடி கடன் நிலுவையை உடனே வசூலிக்க வேண்டும், லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஊழலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் புதுவைக்கு சிறப்பு தகுதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் புதுவையில் மாநில அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும், உயர்த்தப்பட்ட மின்சாரம், குடிநீர், வீட்டுவரி உயர்வை கைவிட வேண்டும், அரசு சார்பு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பள நிலுவையை வழங்க வேண்டும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடத்தப்படுகிறது. அதன்படி நடைபயண தொடக்க நிகழ்வுக்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.சேதுசெல்வம், வ.சுப்பையா தலைமை தாங்கினர். ஜீவானந்தம், ப.முருகன், ஹேமலதா, முன்னிலை வகிததனர்.
தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பிரசார நடைபயணத்தை தொடங்கி சிறப்புரை ஆற்றினார். தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், நிர்வாகிகள்
அ.ராமமூர்த்தி, அ.முசலீம், விஎஸ்.அபிஷேகம் உள்பட பலர் பங்கேற்று பேசினர். தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிகளில் பல்வேறு பகுதிகளில்
பிரசார நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.