சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உடலநலக்குறைபாடு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 75 நாள் தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு டிசம்பர் 5-ஆம் தேதியன்று மரணமடைந்தார்.
அதற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிரிவின் காரணமாக தனி அணியாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பின்னர் அணிகளை இணைப்புக்கான நிபந்தனையாகவும் அதனை அவர் வலியுறுத்தினார்.
தற்பொழுது அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சினிவாசன் பொதுக்கூட்டமொன்றில் பேசும் பொழுது ஜெயலலிதாவை சிகிச்சையின் பொழுது யாரும் சந்திக்கவே இல்லை என்றும், அவர் இட்லி சாப்பிட்டதாக பொய் கூறியதாக அதிர்ச்சியான தகவல்களை கூறினார்.
இந்நிலையில் அதனை ஒட்டி திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு தற்பொழுது முறையான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.