ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்

ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நாமக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (செப்.25) ஆஜரானார்.
நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்.
நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்.

ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் நாமக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (செப்.25) ஆஜரானார்.
நாமக்கல் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான சுப்ரமணியன் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
தனது மரணம் தொடர்பாக சுப்ரமணியன் எழுதிய கடிதத்தை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான பி. பழனியப்பனின் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், ஏற்கெனவே சம்மன் அனுப்பியபோது பழனியப்பன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். ஆனால், இரண்டாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் போலீஸார் அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. நீதிபதி பி.என்.பிரகாஷ் வழக்கை விசாரித்து, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மற்றொரு ஒப்பந்ததாரரான தென்னரசு ஆகியோர் தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையிபேரில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும், 15 நாள்களுக்கு தினமும் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-இல் பழனியப்பன் மற்றும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் தென்னரசு ஆகிய இருவரும் ஆஜராயினர். இருவரும் இரு நபர் உத்தரவாத ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து, நீதிபதி மோகனம்பாள் இருவரும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தினமும் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com