வேலூர்: ஜெயலலிதாவிடம் தங்களைப் பற்றி சசிகலா புறம்பேசி விடுவாரோ என்கிற பயத்தத்திலேயே அவர் கூறியபடி ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அமைச்சர்கள் பொய் பேசியதாக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் சோளிங்கரில் அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு பேசினார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அவருக்கு பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிய சசிகலா, அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று மேல்சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரை ஒருவரும் வந்து பார்க்கவில்லை என்று ஜெயலலிதா உடல் நலத்துடன் திரும்ப வந்த பின்னர் அவரிடம் தங்களைப் பற்றி சசிகலா புறம் சொல்லிவிடுவாரோ என்கிற பயத்தில்தான் பொய்யான தகவலை சொன்னோம்.
சசிகலா குடும்பத்துடன் தொடர்புகொள்ளக்கூடாது என்று 2012-ல் அமைச்சர்கள் மத்தியில் ஜெயலலிதா அறிவித்ததாகச் சொன்ன கே.சி.வீரமணி, ஆட்சியை கைப்பற்றுவதற்கு தினகரன் சதித் திட்டம் தீட்டியதாலேயே அவரை கட்சியிலிருந்து ஜெயலலிதா விலக்கி வைத்ததாக கூறினார்.
இந்த நிலையில், அமைச்சர் செல்வராஜ் ராஜூ, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.