ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில சிகிச்சைப் பெற்று வந்தபோது அவரை யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் தெரிவித்தார். இதையடுத்து இவ்விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது சிபிஐ விசாரணை கேட்பவர்கள் அடுத்து எஃப்பிஐ விசாரணை கேட்பார்களா?. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதி விசாரணை தேவை என்று சொன்னார்கள் அதை அமைத்துவிட்டோம். விசாரணை ஆணையமே போதுமானது.
ஓபிஎஸ் உள்பட 12 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தற்போது அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.