மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளிதழ் மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவரான ஜெனிஃபாவை முன்னாள் தற்காலிக விரிவுரையாளர் ஜோதி முருகன் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த பேராசிரியை ஜெனிஃபா ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாளிதழ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார் பேராசிரியர் ஜெனிஃபா. இவர் இன்று காலையில் தன்னுடைய அலுவலக அறையில் இருந்த போது, முன்னாள் தற்காலிக விரிவுரையாளரும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவருமான ஜோதி முருகன் ஜெனிஃபாவின் அறைக்கு வந்துள்ளார். அப்போது, அவரிடம் தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஜோதிமுருகன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், சரிவர பணியாற்றாததாலேயே பணி நீக்கம் செய்யப்பட்டதால் சேர்த்துக் கொள்ள முடியாது என்று ஜெனிஃபா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெனிஃபாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில், ஜெனிஃபாவின் அலறல் சத்தம் கேட்டு மாணவர்கள் ஓடி வந்து ஜெனிஃபாவை மீட்டனர். உடலில் 15 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதால் அவருடைய அறை ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.
இதனையடுத்து மாணவர்கள் ஜோதி முருகனை சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்ததனர்.
ஜெனிஃபா தாக்கப்பட்டது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெனிஃபா மூலம் ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஆத்திரத்தில் ஜோதி முருகன் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்து கத்தியால் குத்தியதாக தெரிகிறது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜோதி முருகன் தான் கல்லூரியில் பணியாற்றுவதாகக் கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால், இப்போது வேலை இல்லாமல் இருக்கும் முருகனிடம் பெண் வீட்டார் வேலை குறித்து கேட்டு தொந்தரவு செய்ததால், ஜெனிஃபாவிடம் மீண்டும் வேலை கேட்டு வந்ததாக ஜோதி முருகன் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜோதி முருகன் தற்காலிக விரிவுரையாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டதன் முன்விரோதம் காரணமாக ஜெனிஃபாவை தாக்கியுள்ளார். ஜெனிஃபாவிற்கு 15 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோதி முருகன் வந்து வேலை கேட்டு தொந்தரவு செய்தது இப்போது தான் எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது என தெரிவித்த துணைவேந்தர், பல்கலைக்கழகத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளதால் மாணவர்கள் பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். .
பல்கலைக்கழகத்திற்குள்ளேயே நடந்த இந்த சம்பவம் அபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.