தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்ததாகக் கூறி அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிகாடைச் சேர்ந்த பாண்டியராஜ் (29) மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை அருகே உள்ள கூட்டுறவு வங்கிக்குப் பணம் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் செப். 21-ம் தேதி சென்றார்.
அப்போது அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட தாலுகா போலீசார் இவரது வாகனத்தை நிறுத்தினர். ஆவணங்களைக் காட்டிய இவருக்கு சீட் பெல்ட் அணியாமல் வந்ததாகக் கூறி ரூ. 500 அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் பாண்டியராஜ் திங்கள்கிழமை புகார் செய்தார். இந்த மனு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தாலுகா காவல் உதவி ஆய்வாளர் புனிதவல்லி தஞ்சாவூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.