போலி சான்றிதழ் மூலம் அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்ததாக, இரு செவிலியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அதிகாரியாகப் பணிபுரிபவர் பேபி வசுமதி. இவர், எழும்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் ஆர்.அஜந்தா ராணி, ஆர். பூங்கொடி ஆகியோர் போலி சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்திருப்பதாகவும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், அஜந்தா ராணி, பூங்கொடி ஆகியோரது அசல் சான்றிதழ்களை பெற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அவர்களது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்பதும், அவர்கள் உண்மையிலேயே எடுத்த மதிப்பெண்ணை விட பல மடங்கு அதிகமாக மதிப்பெண்ணுடன் அந்த போலி சான்றிதழ் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அஜந்தா ராணி, பூங்கொடி ஆகிய இருவர் மீதும் மோசடி செய்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், அவர்களை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களில் பூங்கொடி தற்போது, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், அஜந்தா ராணி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துமனையிலும் பணிபுரிகின்றனர்.