புதுதில்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க முடியாது என்று டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
அதிமுகவில் நிகழ்ந்துள்ள இபிஎஸ் - ஒபிஎஸ் அணிகள் சேர்க்கைக்குப் பிறகு அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் நியமனங்கள் செல்லாது என்றும்,அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த 22-ஆம் தேதி தில்லி சென்றனர். அங்கு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
அத்துடன் முடக்கப்பட்ட கட்சியின் பெயர் மற்றும் சின்னம் இரண்டும் ஒருங்கிணைந்த அணியான தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதே நேரம் டிடிவி தினகரன் தரப்பும் இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தது
அன்றே அமைச்சர்கள் தலைமையிலான அணி சென்னை திரும்பிய பின்னர் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவின் இரட்டைஇலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.
முன்னதாக இந்த விசாரணை அக்டோபர் 6-ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதின்ற கிளையானது, அதிமுகவின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையமானது வரும் அக்டோபர் மாதம் 30 -ஆம் தேதி இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க முடியாது என்று டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. இதன்மூலம் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.