திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில், கருட சேவையைக் காண வந்தபோது, கொல்லமண்டபத்திலிருந்து தவறி விழுந்த பக்தருக்கு புதன்கிழமை கால்முறிவு ஏற்பட்டது.
திருமலையில் புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு கருடசேவை விமரிசையாக தொடங்கியது. அப்போது, அதனைக் காண பக்தர்கள் கேலரி வரிசைக்குள் முண்டியடித்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, கொல்லமண்டபத்தில் உள்ள மேடையில் காத்திருந்த திருப்பதியைச் சேர்ந்த பிரசாத், கால் இடறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த போலீஸார் அவரை மீட்டு, திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் சேர்த்தனர்.