கடந்த 2010 -ஆம் ஆண்டு வரை, பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாமல் 'அரியர்' வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியது:
கடந்த 2010 -ஆம் ஆண்டு வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு சிறப்புத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அவகாசத்தைப் பயன்படுத்தத் தவறிய மாணவர்கள், இன்னும் இரண்டு பருவ காலங்களில் மட்டும் சிறப்புத் தேர்வாகக் கருதி தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடைபெறும்.
இந்த மாணவர்களுக்கு தனியாக தேர்வெழுதும் கால அட்டவணை, தங்களுடைய தேர்வுப் பாடங்களைப் பதிவு செய்யும் முறைகள், செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ஆகியவை குறித்து பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் இந்தத் தேர்வுகள் நடத்தப்படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, நவம்பர், டிசம்பர் 2017 நடைமுறை மற்றும் நிலுவைத் தேர்வுக்கான கால அட்டவணையில் மாறுதல் இல்லை. இனியும் இத்தகைய வாய்ப்புகள் இந்த மாணவர்களுக்கு அளிக்கப்படாது.