சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கக் கோரி தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ராஜா முத்தையா கல்லூரி மாணவர்கள், பெற்றோர், இந்திய மருத்துவச் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கிய பேர, ரமடா ஹோட்டல் அருகே நிறைவுபெற்றது.
பேரணியில் பங்கேற்றவர்களின் கோரிக்கைகள் குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியது: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை முழுமையான அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பல்கலைக்கழகத்தின், நிதி முறைகேடுகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும். கல்விக் கட்டணத்தை இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும் என்றார் அவர். பேரணி நிறைவு பெற்றதும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சங்கப் பிரதிநிதிகள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று, ஆளுநரின் உதவியாளரிடம் வழங்கினர்.