நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடல் பரப்பில் திங்கள்கிழமை தரைதட்டிய கப்பல் 4 நாள் தொடர் முயற்சியில் வியாழக்கிழமை வெற்றிகரமாக மீட்கப்பட்டு கடலில் செலுத்தப்பட்டது.
மும்பையை சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான கடலில் தூர்வாரும் சிறிய ரக கப்பல் (ஹோப்பர்பார்ஜி) விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு கடலில் மண் தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.
மண்டபம் பகுதியில் தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த ஆயத்தம் செய்யப்பட்ட நிலையில், தூர்வாரும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் சென்னையில் சரிசெய்யப்பட்ட கப்பல் அங்கிருந்து கோடியக்கரை வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு மண்டபம் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது, கடலில் வீசிய பலத்த காற்றால் திசை மாறிய கப்பல் கோடியக்கரை படகுத்துறைக்கு அருகே ஆழம் குறைந்த பரப்பில் தரை தட்டி சேற்றில் சிக்கியது.
கப்பலின் கேப்டன் பாரத் மித்லேஸ் தாகூர்(27) உள்ளிட்ட 9 பேர் இருந்த கப்பலை மீட்க கடந்த 3 நாள்களாக தொடர்ந்து எடுத்து வந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில், நாகையை சேர்ந்த இரண்டு விசைப் படகுகளைப் பயன்படுத்தி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் கப்பல் வெற்றிகரமாக சேற்றில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் கடலில் செலுத்தப்பட்டது.