டெங்கு காய்ச்சல் இறப்புகளைத் தவிர்க்க திடக்கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் உற்பத்தியாகின்றன. நகர்ப்புறங்களில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதும், பள்ளி, அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளில் பிளாஸ்டிக் குவளை, காகிதக் குவளை, டயர், பாத்திரங்கள் என தண்ணீர் தேங்கும் பொருள்கள் மிகுதியாக காணப்படுவதும், ஏடீஸ் கொசுக்கள் முட்டையிட்டு, பெருமளவில் இனப்பெருக்கம் ஏதுவாக உள்ளன.
திடக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு, மின்னணு கழிவு, ஆபத்தான கழிவு, மருத்துவக் கழிவு, கட்டடக் கழிவு என குப்பை மேலாண்மைக்கான 6 விதிகளை 2011 -ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், அந்த விதிகளை மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் முறையாக செயல்படுத்தத் தவறிவிட்டன.
மக்கள் குப்பையை வகைப் பிரித்து அளிப்பதன் மூலமும், நகராட்சிகள் மக்களிடம் குப்பையை தரம் பிரித்து பெற்று அவற்றை மறுசுழற்சி செய்தல் மற்றும் மக்க வைப்பதன் மூலமுமே குப்பைப்ùள பிரச்னைக்கு தீர்வுகாண முடியும்.
டெங்கு பரவ முக்கிய காரணமாக உள்ள குப்பைகளை மேலாண்மை செய்வதற்கு திடக்கழிவு மேலாண்மை விதிகளை தமிழக அரசும், நகர்ப்புற உள்ளாட்சிகளும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.