நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், திமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
சு.திருநாவுக்கரசர்: உலகத்தின் தலைச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த சிவாஜி கணேசனின் மணி மண்டபம் திறப்பு விழாவை, தமிழக அரசு நடிகர் சங்கத்தோடு இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்கத் தலைவர்கள் மற்றும் சிவாஜியின் குடும்பத்தினர் உள்பட அனைவரையும் அழைத்து விழாவை நடத்த வேண்டும். செவாலியே விருதை சிவாஜி பெற்றபோது அன்றைய முதல்வர் ஜெயலலிதா சிறப்பான விழாவை நடத்தினார். எனவே, இப்போது அவரது சிலை மற்றும் நினைவு மணிமண்டபத் திறப்பு விழாவை பெயருக்கு நடத்தாமல் சிவாஜிக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் நடத்த வேண்டும்.
வாகை சந்திரசேகர்: நடிகர் சிவாஜியின் மணிமண்டபத்தை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிவாஜியின் சிலையைப் பார்த்து அவரின் சாதனைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் கருணாநிதி அவரது சிலையை அங்கு நிறுவினார். முதல்வர் திறந்து வைத்தால் மட்டுமே சிலைத் திறப்பு விழாவுக்கு வருவோம் என்று திரை நட்சத்திரங்கள் அனைவரும் அறிவிக்க வேண்டும்.