சென்னை: ஜல்லிக்கட்டுகாகப் போராடியது போல காவிரிக்காவும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராட வேண்டும் என்று அதிமுக எம்.பியும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கும் விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார். அப்படிக் கொண்டு வந்தால் ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாரா?
காவிரி விவகாரத்தில் அனைத்து மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக போராட வேண்டும். ஜல்லிக்கட்டுகாகப் போராடியது போல காவிரிக்காவும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராட வேண்டும்.
அதிமுக அரசு எப்பொழுதும் மக்கள் நலனுக்காக செயல்படும் அரசு. ஆனால் அரசியலுக்காகவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தில் எங்களுடைய போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.