சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் விவரம் தெரியாமல் ரஜினி பேசக்கூடாது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஞாயிறன்று படாளம் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது ஏற்கத்தக்கதல்ல. அதுவும் காவிரி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு மூன்று மாதம் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என நாங்கள் தடை எதுவும் விதிக்கவில்லை. உயர்நீதிமன்றம் தான் தடைவிதித்துள்ளது.
அரசியல் லாபத்துக்காக திமுக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் விவரம் தெரியாமல் தமிழக அரசு அமைதி காப்பதாக ரஜினி பேசக்கூடாது. அரசின் அறிக்கையை முழுமையாக படித்துவிட்டு நாளை அவர் பதில் சொல்லட்டும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.