சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கத் தடை மற்றும் அவரது படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் சமாதியில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. இதேபோல அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதும், அரசு செலவில் அவருக்கு நினைவிடம் அமைப்பதும் சட்ட விரோதம் என்று கூறி, சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் சி.குமரன் ஆகியோர் தரப்பில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ. செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஐந்து மனுதாரர்கள் தரப்பிலும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. எனவே ஐந்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்