சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்து வரும் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள் இரவு 7 மணிக்கு தில்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதேநேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்து வரும் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள் இரவு 7 மணிக்கு தில்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அவர் செவ்வாயன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் உள்ளிட்டவர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் போராட்ட சூழல் குறித்து எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.
வரும் 1-ஆம் தேதி நிகழ்வு ஒன்றில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள சூழலில் ஆளுநரது தில்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.