சென்னை: இராமனின் பெயரால் இரத்தத்தை காவு கேட்கிற கூட்டம் என்று கொல்கத்தா ராம நவமிக் கொண்டாட்டங்களினால் உண்டான உயிர்ப்பலிகள் குறித்து பாஜக மீது நாஞ்சில் சம்பத் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ராம நவமிக் கொண்டாட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து 5 பேர் பலியாகினர். இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
மகுடத்தை மறுதலித்து 14 ஆண்டுகள் வனவாசம் செய்த இராமனின் பெயரால் இராமநவமிக் கொண்டாடி வங்காளத்தில் 5 பேர் உயிரை பலி வாங்கியிருக்கிறார்கள் . வங்காளத்தில் தடம் பதிக்க அவர்களுக்கு இன்று இராமன் கிடைத்திருக்கிறான் . இதை இராமனே விரும்பமாட்டான்.
இராமநவமியைக் கொண்டாடி வங்காளத்தின் நிம்மதியை கெடுத்தவர்கள் எதிர்காலத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. ‘ PUBLIC MEMORY IS SHORT‘ என்று நினைக்கிறார்கள் . ஆனால் ‘PUBLIC MEMORY IS SHARP’ என்று நிரூபிப்பதற்கு மக்கள் சித்தம் கொண்டுவிட்டார்கள். இராமனின் பெயரால் இரத்தத்தை காவு கேட்கிறக் கூட்டம் இதை புரிந்துகொள்வது நல்லது .
இவ்வாறு அவர் மறைமுகமாக பாரதிய ஜனதாவை விமர்சித்திருக்கிறார்.