சென்னை: காவிரி போராட்டத்தில் கைதாகி பெரம்பூர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், போராட்டக்களத்தில் விசிக தொண்டர் ஒருவருக்கு திருமணம் நடத்தி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வியாழன் காலை சென்னை மெரீனா கடற்கரையில் ஊர்வலமாகச் சென்று போராடிய மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து, பெரம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தற்பொழுது தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் ஒருவருக்கு மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர் ஒருவரது திருமணம் இன்று அவர்களது கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடப்பதாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அறிவிக்கப்பட்ட காவிரி போராட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன், கைதாகி தற்பொழுது ஸ்டாலினுடன் பெரம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் இருக்கிறார்.
ஆனாலும் அவரது தலைமையில்தான் திருமணம் நடைபெற வேண்டுமென்று விரும்பிய ஜோடி நேராக பெரம்பூர் திருமண மண்டபத்திற்கே வந்து விட்டது, பின்னர் திருமாவளவனின் வேண்டுகோளின் பெயரில் ஸ்டாலின் அவர்களது திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.
இந்த ருசிகர சம்பவம் அங்குள்ளவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.