சென்னை: பிரதமர் மோடிக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வரும் 12 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக , அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்றும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவதோடு அன்று கருப்பு சட்டை அணிய வேண்டும் என்றும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
அதேசமயம் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று திங்களன்று விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரியுள்ளார். அது அவரது சொந்த கருத்தாக இருந்தாலும் அவர் கூறியதன் பொருள் இதுதான்.
பொதுவாக இந்தியா விவசாயத்தையும் விவசாயிகளையும் அடிப்படையாக கொண்ட ஒரு நாடு. தமிழகத்திற்கும் அடிப்படை விவசாயம்தான். எனவே பிரதமர் மோடி காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் மூலம் விவசாயிகளுக்கு நீர் வழங்க வேண்டியதை நினைவுறுத்தும் வகையில் பச்சைக் கொடி காட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.