திண்டிவனம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாமக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தின் பொழுது ரயிலின் மேலே செல்லும் உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கிய வாலிபர் படுகாயமடைந்தார்.
உச்ச நீதிமன்றத்த தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதனன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன் ஒரு பகுதியாக திண்டிவனத்தில் புதன்கிழமை காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸை பாமக தொண்டர்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்பொழுது திண்டிவனத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரஞ்சித் என்பவர் மற்றொரு தொண்டருடன் ரயில் பெட்டியின் மீது தாவி ஏறினார். அவர்கள் பெட்டியின் மீது தாவி முன்னால் செல்ல முயன்றனர்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக ரயில் பெட்டியின் மீது செல்லும் உயர் மின்னழுத்த கம்பி ரஞ்சித்தின் மீது உரசியது. இதில் கடுமையாக மின்சாரத்தால் தாக்கப்பட்டு அவர் கீழே விழுந்தார். உடனடியாக அவர் திண்டிவனம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு 70% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விடியோ: