மாநில உரிமைகளைக் காப்பாற்ற எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு தவறிவிட்டது என்று மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளருமான டி.ராஜா தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி 46-ஆவது வார்டு கல்லம்பாளையத்தில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 21 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சமுதாய நலக் கூடத்தைத் திறந்துவைத்து செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
காவிரிப் பிரச்னையில் தமிழகத்தில் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழக மக்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துள்ளது. கூட்டாட்சி நெறிமுறைகளை மதித்து செயல்படாத அரசாக மோடி அரசு உள்ளது. இதனைத் தட்டிக்கேட்காமல், மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு உள்ளது. தலித், பழங்குடியின மக்களின் நலன்களைக் காப்பாற்றுவதில் பாஜகவுக்கு அக்கறை இல்லை.
இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறது. சிறு, குறுதொழில், விவசாயம் நிலைகுலைந்த நிலையில், மதவெறி அரசியலில் ஈடுபடுவதுடன் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்றவர்கள் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தது ஏமாற்றும் வேலை. ஒரு கட்சி நலனுக்காக நாட்டின் கூட்டாட்சி நெறிமுறைகளைப் பலியிடுவது, மாநில நலன்கள் புறக்கணிக்கப்படுவது தமிழகத்தில் மக்கள் கிளர்ச்சிகளை அதிகப்படுத்தத்தான் செய்யும் என்றார் அவர்.