சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
சென்னை வில்லிவாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை அமைச்சர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பின்னர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
மெரீனாவில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம்தான் தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும். மெரீனாவில் போராட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா, பொது அமைதிக்குப் பாதகம் வருமா என்பது குறித்து ஆலோசித்து அரசு பரிசீலனை செய்யும்.
அகராதியை மத்திய அரசு பார்க்கட்டும்: காவிரி விவகாரத்தில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் முடிவையே, மத்திய அரசு நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நீதி கிடைக்கும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட "ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை எனில், அகராதியைப் பார்த்து மத்திய அரசு தெரிந்துகொள்ளட்டும். "ஸ்கீம்' என்பது மேலாண்மை வாரியம்தான் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது என்றார் அவர்.