'திரைப்படத் துறைக்கு தற்போது ஏற்பட்டுள்ள அழிவைத் தடுத்து அத்துறையைக் காப்பேன்' என நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தெரிவித்தார்.
விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பாக அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பாராட்டு விழா நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் படப்பையை அடுத்த கரசங்கால் பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், செல்வமணி, விக்ரமன், பேரரசு, மனோபாலா, நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், நாசர், மயில்சாமி, ரமேஷ் கண்ணா, ஸ்ரீமன், நடிகைகள் உள்பட திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அவர்கள் திரைத்துறையில் தாங்கள் விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் பேசிய திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவர்களான இயக்குனர்கள் பலரும் தற்போது தமிழ்த் திரையுலகம் சீரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அதனை முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
பிரேமலதா பேசும்போது, 'திரைத்துறையினரின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்த் திரையுலகை விஜயகாந்த் மீட்பார். திரைத்துறையில் அவரது 50 ஆண்டு நிறைவு விழாவும் நடைபெறும். அப்போது விஜயகாந்த் தமிழகத்தின் முதல்வராக இருப்பார்' என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து மாவட்ட தேமுதிக சார்பாக விஜயகாந்திற்கு தங்கப் பேனா பரிசாக வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்டு பேசிய அவர் 'என்னை வாழவைத்த கலைத்துறைக்கு தற்போது ஏற்பட்டுள்ள அழிவைத் தடுத்து திரைத்துறையைக் காப்பேன்' என உறுதியளித்தார்.
விழாவில் ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.