ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 7 லட்சத்து 32 ஆயிரத்து 931 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கூட்டுறவு தணிக்கைத் துறை, உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை ஆகிய துறைகளில் பணியாற்றுவோருக்கு மடிக் கணினிகளையும் துணை முதல்வர் வழங்கினார். இரு துறைகளுக்கும் தலா 242 மடிக்கணினிகள் வீதம் 484 மடிக்கணினிகள் அளிக்கப்பட்டன.
இந்த விழாவில், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளர் தென்காசி சு.ஜவஹர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.