தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த ஜெயலலிதா அறிவுறுத்தினார் : ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாட்சியம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, 'தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்கள், ஊடகங்களில் தவறான செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, 'தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்கள், ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்படக் கூடும். எனவே அதுகுறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்' என அவர் அறிவுறுத்தியதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ரமணன் குறுக்கு விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 25 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை ஆணையத்தில் சசிகலா அண்மையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய சசிகலா தரப்பு வழக்குரைஞர்களுக்கு ஆணையம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியா, மகன் விவேக், அரசு மருத்துவர் சுதா சேஷய்யன், சுவாமிநாதன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ரமணன், சசிகலா உதவியாளர் கார்த்திகேயன், ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் உள்ளிட்ட 8 பேரிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திங்கள்கிழமை குறுக்கு விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவின் உடலை 'எம்ஃபாமிங்' செய்த அரசு மருத்துவர் சுதா சேஷய்யனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'கடந்த 2016 -ஆம் ஆண்டு டிசம்பர் 5 -ஆம் தேதி நள்ளிரவு ஜெயலலிதாவின் உடலுக்கு எம்ஃபாமிங் செய்யப்பட்டது என்றும், அப்போது அவரது திசுக்களின் நிலையைப் பார்த்தபோது, 15 மணி நேரத்துக்குள்ளாக அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது' என்றும் அவர் தெரிவித்ததாக, ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.
மேலும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ரமணனிடம் நடத்திய குறுக்கு விசாரணையில், 'அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அனைத்துச் செயலர்களையும் அழைத்த ஜெயலலிதா, 'தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்கள், ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்படக் கூடும். அதனால், தனது உடல்நிலை குறித்து மக்களுக்குத் தெரிவியுங்கள்' என அறிவுறுத்தினார்' என்று வெங்கட்ரமணன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com