தமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட ஓமலூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களையும், தமிழகத்தையும் மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்து வருகின்றன. தமிழகம் போராட்டக் களமாக மாறியதற்கு மக்கள் விரும்பாத, மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முற்படுவதே காரணம் ஆகும் என்றார்.
சேலம் விமான நிலையத்தை 570 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிபாடி ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களை கையப்படுத்துவதாகக் கூறி, கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், தும்பிபாடி கிராமத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்ற ஜி.கே.வாசன் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, வாசன் பேசியது:-
அரசு சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நிலங்களை எடுக்கும் முயற்சியில் இறங்கினால், இங்குள்ள விமான நிலையத்தை இழுத்து மூடும் போராட்டத்தை த.மா.கா. நடத்தும் என்றார்.
அப்போது, கட்சியின் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கரு.வெ.சுசீந்தரகுமார், இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் யுவராஜா, மாநில பொதுச் செயலர் எஸ்.ரகுநந்தகுமார், ஓமலூர் வட்டாரத் தலைவர் ஓ.சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.