நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள்: தெற்கு ரயில்வேக்கு வழங்கியது ஐ.சி.எஃப்
நவீன வசதிகளைக் கொண்ட அந்தியோதயா ரயில் பெட்டிகளை ஐ.சி.எப். நிறுவனம் முதன்முறையாக தயாரித்து தெற்கு ரயில்வேக்கு வழங்கியுள்ளது.
ரயில் பயணிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி வசதியாக பயணம் செய்வதற்கு ஏதுவான வகையில் நவீன ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஐ.சி.எஃப் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், வெளிபூச்சு வண்ணம் இன்றி துருப்பிடிக்காத எஃகு (ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்) தகடுகளைப் பயன்படுத்தி அந்தியோதயா ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட இந்த ரயில் பெட்டிகள் அந்தியோதயா ரயிலில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த ரயிலில் 22 முன்பதிவில்லாத பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. 120 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயிலில் ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் இணைப்பு வசதியும் உள்ளது. அத்துடன் இப்பெட்டிகளில் சொகுசு இருக்கைகள், அதிக எண்ணிக்கையில் செல்லிடப்பேசிகளை சார்ஜ் செய்யும் மின்இணைப்பு வசதி, குடிநீர் வசதி, பார்வையற்றவர்கள் நடப்பதற்கு வசதியாக பிரெய்லி முறை உருவாக்கப்பட்டுள்ளது.
எல்.இ.டி. விளக்கு, தீயணைப்புக் கருவி, நவீன கழிப்பறை வசதி, பக்கவாட்டு தடுப்புகள் வண்ணம் இல்லாமல் துருப்பிடிக்காத ( ஸ்டெயின்லஸ்) எஃகு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகளில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் அமர்ந்தும், நின்றும் செல்ல முடியும்.
முதன்முறையாக இந்த ரயில் பெட்டிகள் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, தாம்பரம்-திருநெல்வேலிக்கு இடையே செல்லும் அந்தியோதயா ரயிலில் இணைத்து இயக்கப்பட்டன. இதுபோன்று மற்றொரு அந்தியோதயா ரயில் சேவைக்காக 22 பெட்டிகளை தயாரித்து தெற்கு ரயில்வேக்கு ஐசிஎஃப் வழங்கவுள்ளது என்று அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.