மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை கைது

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை கைது

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு, கணிதத் துறை உதவிப் பேராசிரியையாக ஆத்திபட்டியைச் சேர்ந்த நிர்மலாதேவி (46) பணிபுரிந்து வருகிறார். இவர், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், கருத்தரங்குகள் முதலியவற்றுக்கு மாணவ, மாணவிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கமாம். 
இந்நிலையில், நிர்மலாதேவி, கடந்த மாதம் அவரது துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, பல்கலைக்கழக அதிகாரிகள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றினால் மதிப்பெண், பணம், அரசு வேலை எளிதில் கிடைக்கும் என தவறான நோக்கில் பேசினாராம்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் கடந்த மார்ச் 19-ல் கல்லூரி நிர்வாகத்திடம் உதவிப் பேராசிரியை மீது புகார் தெரிவித்தனர். இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவியிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி மார்ச் 21-ல் அவரை பணியிடை நீக்கம் செய்தது. 
இந்நிலையில், உதவி பேராசிரியை மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரசாந்த், இந்திய மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞருமான நிர்மலாராணி மற்றும் மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 


மாணவிகளிடம் தவறான நோக்கில் பேசிய உதவிப் பேராசிரியை குறித்து கல்லூரியில் திங்கள்கிழமை கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் மதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா மற்றும் வட்டாட்சியர் சிவகார்த்திகாயினி ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஆத்திபட்டியில் உள்ள நிர்மலாதேவி வீட்டிற்கு விசாரிக்க சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்லிடப்பேசி மூலம் அவர், வீட்டின் உள்ளே இருந்து கொண்டு வெளிக்கதவு மற்றும் வீட்டின் உள்புறமாக பூட்டியிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸார், அவரது உறவினர்கள் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை நிர்மலாதேவிக்கு தெரியப்படுத்தினர். பின்னர் வேறு வழியின்றி உதவிப் பேராசிரியை கதவை திறந்து வெளியில் வந்தபோது, அவரை போலீஸார் கைது செய்தனர். 
பேராசிரியை மீதான புகாரை விசாரிக்க 5 பேர் குழு அமைப்பு: பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி. செல்லத்துரை திங்கள்கிழமை கூறினார்.
புதுதில்லியில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் கருத்தரங்கிற்குச் சென்றுள்ள துணைவேந்தர் பி.பி. செல்லத்துரையிடம் செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியது:
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தன்னாட்சி அதிகாரமுடையது. அதற்கும் பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியையின் நடவடிக்கைகள் சரியல்ல. அவர் உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் அறிவியல் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. 
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை மீது விசாரணை நடத்திட பல்கலைக்கழகத்தின் சார்பில் கணிதத்துறை பேராசிரியர், ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த குழுவில் கணிதத்துறை பேராசிரியர் லில்லிஸ் திவாகர், ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆண்டியப்பன், பேராசிரியைகள் ஜெயபாரதி, வரலட்சுமி, ராஜதபலா ஆகியோர் இடம் பெற்றிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

அருப்புக்கோட்டை கலைக் கல்லூரி வளாகத்தில் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மீது நடவடிக்கை கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவிகள்.
அருப்புக்கோட்டை கலைக் கல்லூரி வளாகத்தில் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மீது நடவடிக்கை கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவிகள்.


நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை மீது நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அவர் மீது உடனடியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். உயர் கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தன் வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறும் வகையில், விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த விசாரணை முறையாக நடைபெறும் வகையில், தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், விசாரணை முடியும்வரை ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் ஆகியோரை பணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ்​
கல்லூரி மாணவிகளிடம் உதவிப் பேராசிரியை பாலியல் ரீதியாக பேரம் பேசியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் கலை - அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் நிர்மலா தேவி என்ற உதவிப் பேராசிரியை, சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.
இதன் பின்னணியில் உள்ள பெரிய மனிதர்களை வெளிக்கொண்டு வரும் வகையில், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com