லிம்கா சாதனை முயற்சியாக வேலூர் பள்ளி மாணவிகள் 80 பேர் இணைந்து 180 அடி அகல ஓவியத்தை 2 மணி நேரத்தில் வரைந்தனர். 4 வகையான ஓவியத்தை குறுகிய நேரத்தில் வரைந்து சாதனை புரிந்த மாணவிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
உலக ஓவிய தினத்தையொட்டி, வேலூர் சாய்நாதபுரத்திலுள்ள வி.வி.என்.கே.எம். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 80 பேர் இணைந்து லிம்கா சாதனை முயற்சியாக 180 அடி அகலத்தில் 2 மணி நேரத்தில் ஓவியங்களை வரைந்திட முடிவு செய்தனர். இதற்காக பள்ளி மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து, மாணவிகள் திங்கள்கிழமை 180 அடி அகலத்தில் ஓவியம் வரைந்தனர். அதில், மரம் வளர்ப்பு, புவி வெப்பமயமாதல், பூமியைப் பாதுகாக்கும் கைகள், மரங்கள் வெட்டுதலை தடுத்தல் ஆகிய கருத்துகளை விளக்கம் வகையில், 4 ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த ஓவியங்களை 2 மணி நேரத்தில் வரைந்து முடித்து, லிம்கா சாதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த முயற்சியை லிம்கா குழுவினர் பரிசீலனை செய்து சான்றிதழ் வழங்குவர் என எதிர்பார்க்கப்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மாணவிகளின் இந்த சாதனை முயற்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சிவக்குமார், ஓவிய ஆசிரியர்கள் நவக்குமார், பரிமளா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.