சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் கூறினார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'மெர்க்குரி' படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் கட்டணக் குறைப்பு, திரையரங்குகள் டிக்கெட் கட்டணம் கணினி மயமாக்க வேண்டும், பெரிய - சிறிய பட்ஜெட் படங்கள் டிக்கெட் விலை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 48 நாள்களாக தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய திரைப்படங்களின் வெளியீடு, புதிய படங்களின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம் உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்களிடம் விஷால் புதன்கிழமை கூறியதாவது:-
கடந்த 48 நாள்களாக ஒத்துழைப்பு கொடுத்த திரைத்துறையினருக்கு நன்றி. குறிப்பாக பெப்சி தொழிலாளர்கள் ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கு நன்றி என்பதை விட கடமைப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக டிஜிட்டல் கட்டண விஷயத்தில் நடந்து வந்த பல கோளாறுகள் இன்றைக்கு முடிவுக்கு வந்துள்ளன.
டி சினிமா, இ சினிமா தொழில்நுட்ப விஷயங்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், படங்கள் வெளியீட்டுக்கு புதிய குழு ஒன்று அமைக்கப்படும். தமிழ் திரைப்படத் துறையை முழுமையாக கணினி மயமாக்குவது ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும். வேலைநிறுத்த போராட்டத்துக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முதல் படமாக 'மெர்க்குரி' வெளியாகும்; தொடர்ந்து நிலுவைப்படி ஒவ்வொரு படமாக வெளியிடப்படும். புதிய படங்களின் படப்பிடிப்புகளும் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
'காலா' படம் குறித்து...: நடிகர் ரஜினிகாந்தின் 'காலா' படம் எப்போது வெளியாகும் என்பதை படக்குழு முடிவு செய்யும். காவிரி மேலாண்மை விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பை நிறுத்துவது, பட வெளியீட்டை நிறுத்துவது குறித்து தமிழக அரசுதான் சொல்ல வேண்டும். திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ. 50 தொடங்கி ரூ.150 வரைக்கும் இருக்கும்'' என்றார் விஷால்.