முதுநிலை மருத்துவப் படிப்பு: அகில இந்திய கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடக்கம்
சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்குகளின் காரணமாக, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வை நிறுத்தும்படி செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கலந்தாய்வு நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக மத்திய சுகாதார சேவைகள் இயக்கத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு அறிவித்தது.இந்த நிலையில், அவ்வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை (ஏப்.18) வெளியானதைத் தொடர்ந்து மீண்டும் கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, இரண்டாம்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றோர், குறிப்பிட்ட கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.