தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளை காலியாக உள்ளதாக அறிவித்து, அவற்றுக்கு தேர்தல் நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர், கடந்த ஆண்டு செப்டம்பர் 18 -ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
இதேபோன்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கும் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ' எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர்களது 18 தொகுதிகளும் கடந்த 7 மாதமாக காலியாக உள்ளன. இதனால் அந்தத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்களது அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவித்து, அவற்றுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.