பதவி ஆசையே காரணம்: கல்லூரி பேராசிரியை பரபரப்பு வாக்குமூலம் 

மதுரை காமராஜர் பல்கலை.யில் பதிவாளர் பதவி பெற்றுத் தருவதாக அப் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் சிலர் ஆசைகாட்டியதால்தான், மாணவிகளிடம்
பதவி ஆசையே காரணம்: கல்லூரி பேராசிரியை பரபரப்பு வாக்குமூலம் 

மதுரை காமராஜர் பல்கலை.யில் பதிவாளர் பதவி பெற்றுத் தருவதாக அப் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் சிலர் ஆசைகாட்டியதால்தான், மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தனியார் கலைக் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியையான நிர்மலா தேவி, அக்கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் செல்லிடப்பேசி மூலம் பாலியல் பேரம் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
நிர்மலா தேவிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அவர், அருப்புக்கோட்டையில் தங்கியுள்ளார். சென்னை பல்கலை.யில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்த அவர், பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அதை மாற்றி ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஏற்கெனவே அருப்புக்கோட்டை கல்லூரியில் படித்து தற்போது காமராஜர் பல்கலைக்கழகத்தில் கலை-வரலாறு துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவருடன் நிர்மலா தேவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக வணிக வேளாண்மை துறையில் பணிபுரியும் உதவி பேராசிரியர், தொலை நிலைக் கல்வி இயக்ககத்தின் உயர் அதிகாரி மற்றும் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புத்தாக்கப் பயிற்சிக்கு வந்த நிர்மலா தேவிக்கு, பல்கலைக்கழக தங்கும் விடுதியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் நிர்மலா தேவியை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில்தான் இரண்டாம் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் நிர்மலா தேவியிடம் முனைவர் பட்ட வழிகாட்டி மற்றும் பதிவாளர் பதவி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக கல்லூரி மாணவிகளை அழைத்து வருமாறு கூறியுள்ளார். அதை நம்பிதான் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக நிர்மலா தேவி கூறியுள்ளார். தன்னிடம் போதிய அளவு பணம் இருந்தும், பதவிக்காக இந்த நிலைக்கு சென்று விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். 
மேலும் அருப்புக்கோட்டை கல்லூரியில் நிர்வாகம் செய்வது தொடர்பாக மூன்று கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு கோஷ்டிதான், தன்னை தேவைக்கு பயன்படுத்திவிட்டு, தனக்கு எதிராக ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் நிர்மலா தேவி கூறியுள்ளார். நான் மாணவிகளிடம் ஏற்கெனவே பலமுறை செல்லிடபேசியில் பேசியுள்ளேன். ஆனால், கடைசியாக என்னை சிக்க வைப்பதற்காக பேசி அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர் என நிர்மலா தேவி கூறி வேதனைப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com