சென்னை: மெரினா கடலில் அதிகரித்துள்ள பாக்டீரியாக்களின் காரணமாக அங்கு குளித்தால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்று மத்திய கடல் ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது
சென்னையில் கடல் நீரில் உள்ள மாசுபாட்டின் அளவு குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி மையம் விரிவான ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. இந்த ஆய்வானது மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர் மற்றும் கோவளம் ஆகிய ஐந்து கடற்கரை பகுதிகளில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்காக மொத்தம் 192 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் பொதுவாகவே உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகள் அதிகரித்து கடல் நீர் மாசடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வழியாக செல்லும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் பாக்டீரியாக்கள் அதிகரித்து, கடல் நீர் மாசு அடைந்து வருவதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது.
அதிலும் குறிப்பாக மெரினாவில் சேகரிக்கப்பட்ட கடல் நீர் மாதிரிகளில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருந்தது என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மெரினா கடலில் குளிப்பதால் செரிமான பிரச்சினை, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது