சென்னை மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை மாநகர காவல் ஆணையர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவில், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, சென்னை மெரீனா கடற்கரையில் 90 நாள்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மெரீனாவில் போராட்டம் நடத்த ஏன் அனுமதிக்கக் கூடாது' என பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், சென்னை மாநகர காவல் ஆணையர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படும் இடங்களில் மெரீனா கடற்கரை இல்லை. ஒருவேளை இந்தப் போராட்டத்தை மெரீனாவில் நடத்த அனுமதித்தால், பல்வேறு சமூக விரோத கும்பல்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்ட -ஒழுங்குப் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஒருநாள் அதாவது காலை முதல் மாலை வரை மட்டுமே வரையறுக்கப்பட்ட இடங்களான வள்ளுவர் கோட்டம், காயிதே மில்லத் மணிமண்டபம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் என குறிப்பிட்ட இடங்களில் அனுமதியளிக்கப்படுகிறது. எனவே, மனுதாரர் தமது போராட்டத்தை மெரீனா கடற்கரையில் நடத்த அனுமதி வழங்க முடியாது' என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.