தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 11 இடங்களில் 100 டிகிரியும், அதற்கு மேலும் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை பதிவானது. திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கரூர் மாவட்டம் பரமத்தி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவாகியது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 வரையிலான 24 மணிநேரத்தில் திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கரூர் மாவட்டம் பரமத்தி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. நாமக்கல், சேலம், வேலூரில் 103 டிகிரியும், தருமபுரி, மதுரையில் 102 டிகிரியும் வெப்பம் பதிவாகியது. மேலும், சென்னை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரியாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.