சென்னை: சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் நடந்த வங்கிக் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டு, பணம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் இந்தியன் வங்கி ஒன்று அமைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும் எடுக்கவும் திரண்டிருந்தனர். திங்களன்று நண்பகலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வங்கியினுள் நுழைந்துள்ளார். அங்கு பணம் செலுத்த வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம், திடீர் என்று துப்பாக்கியை காட்டி ரூ.6 லட்சத்தினை கைப்பற்றியுளார்.
பின்னர் கூடியிருந்தவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார்.அதன்படி வெளியே வந்தவர் அங்கிருந்து தப்பிக்க முயலும் பொழுது, போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த நபரை சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் உடனடியாக அவரை இந்திரா நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர் பிகார் மாநிலத்தினைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.