சென்னை: அரசியலில் கமல் காணாமல் போன சிற்றெறும்பாகி விடுவார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
தமிழக அரசின் சார்பாக கவிஞர் இளங்கோ அடிகளின் சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்குபெற்றனர். நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெய்குமார் பதிலளித்தார். அப்பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறித்து கேட்கப்பட்ட பொழுது, அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
கமல் எங்கே இருக்கிறார்? அவர் திடீரென்று ட்விட்டரில் வருவார். இல்லை என்றால் பேஸ்புக்கில் வருவார்; யூட்யூபில் வருவார். பார்த்துக் கொண்டே இருங்கள். இனிமேல் எஸ்.எம்.எஸ்ஸில்தான் வருவார்.
சுருக்கமாக சொல்வதென்றால் என்னமோ தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பார்களே..அதுபோல கமல் கட்டெறும்பிலிருந்து சிற்றெறும்பாகி..பின்னர் அரசியலில் காணாமலே போய் விடுவார்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.