தமிழக மக்களின் மனசாட்சியில் பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறீர்கள்: விஜயகாந்த் மீது கனல் கக்கிய வாகை சந்திரசேகர் 

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியில் நீங்கள் படுகுழியில் தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறீர்கள் விஜயகாந்த் என்று நடிகரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் மனசாட்சியில் பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறீர்கள்: விஜயகாந்த் மீது கனல் கக்கிய வாகை சந்திரசேகர் 

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியில் நீங்கள் படுகுழியில் தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறீர்கள் விஜயகாந்த் என்று நடிகரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞரை பார்க்கவிடாமல் மு.க.ஸ்டாலின் என்னைத் தடுத்தார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வாயன்று அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு எதிர்வினையாக தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியில் நீங்கள் படுகுழியில் தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறீர்கள் விஜயகாந்த் என்று நடிகரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் வாகை சந்திர சேகர் எம்.எல்.ஏ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தலைவர் கலைஞரை பார்க்கவிடாமல் என்னைத் தடுத்தார் மு.க.ஸ்டாலின் என்ற அபாண்டமான பழியை, பச்சை பொய்யை “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழுக்கு (24/04/2018) பேட்டி அளித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இந்த பேட்டி உங்கள் வாயால் கூறப்பட்டதா ? அல்லது வேறு ஒருவருடைய காழ்புணர்ச்சியின் வெறி உங்கள் வாயிலாக வெளிப்பட்டதா ? விஜயகாந்த் அவர்களே உங்கள் இயலாமையைப் பயன்படுத்தி தளபதி மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை வெறுப்பை நெருப்பாய் கக்கியது யார்?

கலைஞரை பார்க்கவிடாமல் தளபதி தடுத்தார் என நா கூசாமல் பேசி உள்ளீர்களே! கோபாலபுரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் நேரில் கண்ட காட்சியை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். தலைவர் கலைஞரை சந்திக்க எத்தனையோ பேர் காத்திருந்தாலும் நீங்கள் வந்திருப்பதை அறிந்ததும் தளபதி அவர்கள் உடனே தலைவரிடம் சென்று “விஜி வந்திருக்கிறார்” என்று எத்தனையோ தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் போன்றோரை தாண்டி உங்களை தலைவர் கலைஞரிடம் பேச வைத்து, வாசல் வரை வந்து, உங்களை வழி அனுப்பி வைத்த காட்சியை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

விஜயகாந்த் அவர்களே “என்னுடைய மனசாட்சி ஸ்டாலினை எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை” என்று கூறியுள்ளீர்கள். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியில் நீங்கள் படுகுழியில் தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜென்மமாய் இருக்கிறீர்கள். விஜயகாந்த் அவர்களே, தளபதி அவர்கள் எப்போதும் உங்களை விரும்பியதும் இல்லை, வெறுத்ததும் இல்லை.

காவிரிப்பிரச்சனை தொடர்பாக தி.மு.க கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? என்ற  கேள்விக்கு விஜயகாந்த் “ஸ்டாலினை துதிபாடுவதை தவிர வேறு எதுவும் அங்கே நடக்க போவதில்லை. அவர் என்ன கருணாநிதியா ? ஸ்டாலின் வேண்டுமானால் தன்னை கருணாநிதி என்று நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அது உண்மை அல்ல” என்று உளறிக்கொட்டியுள்ளார்.

எங்கள்  செயல் தலைவர்  தளபதி  அவர்களுக்கு புகழ்ச்சி என்பது பிடிக்காத ஒன்று. நண்பர் விஜயகாந்த் அவர்களின் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமென்றால் தளபதி அவர்களுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை புகழ்ச்சி. மேலும் பேட்டியில் “அவர் என்ன கருணாநிதியா ?” “ஸ்டாலின் வேண்டுமானால் கருணாநிதி என்று தன்னை நினைத்துக்கொள்ளலாம்“ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.   தளபதி அவர்களை தி.மு.காரர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள், எதிர்க்கட்சி நண்பர்கள், ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் கலைஞருக்கு பிறகு தளபதிதான், அதுவும் நாகரிக அரசியல் தலைவர் என ஏற்றுக் கொண்டார்கள். தலைவர் கலைஞரே “இந்த இயக்கத்தை எதிர்காலத்தில் வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் தகுதியும் படைத்தவர் தளபதிதான்” என மக்கள் மன்றத்தில் முழக்கமிட்டுள்ளார். “அப்பனைப் போலவே மகனும் எடுத்த காரியத்தை முடிப்பதில் அடம்பிடிக்கிறான்” என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பேரறிஞர் அண்ணாவால் பாரட்டப்பட்டவர் தளபதி அவர்கள். வரலாறு தெரியாமல் உளறாதீர்கள்.

விஜயகாந்த் அவர்களே !  நீங்கள் ஆரம்ப காலங்களில் மேடையில் பேசும்போது கலைஞரின் வைர வரிகளான “வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்“ என பேசி கைதட்டல் பெறுவீர்கள். 

கலைஞருக்கே பிடித்த வரிகளை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன் “மனசாட்சி தூங்கும் போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடும்“.

ஒருவரிடம் குறை இருந்தால், அதை பெரிதுபடுத்தி அவரின் எதிரிகள் ஊருக்கெல்லாம் பறைசாற்றி தாங்கள் பயனடைவார்கள். விஜயகாந்த் அவர்களே உங்கள் இயலாமையை உங்கள் குடும்பத்தாரே பயன்படுத்தி உங்களுக்கே உலை வைக்கும் விசித்திரத்தை பார்க்கிறோம். இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இப்போதும் உங்களுக்கு உண்டு என்று நம்புகிறோம்.

அரசியலில் மார்க்கெட் போகாமல் இருக்க மக்களின் மனதில் நிலைத்திருக்கும் தளபதி பெயரை பயன்படுத்தி இழந்த அரசியல் மார்க்கெட்டை பிடிக்க நினைக்காதீர்கள். சினிமா வேறு அரசியல் வேறு. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!

இவ்வாறு அந்த அறிக்கையில் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com