தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி புதன்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர்.
மார்க்சிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனப் பேரணியில் 300 }க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். சென்னை சைதாப்பேட்டையிலிருந்து ஊர்வலமாகச் சென்ற அவர்களை போலீஸாôர் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
முன்னதாக, கண்டனப் பேரணிக்குத் தலைமை வகித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியது:
தமிழகத்தின் உயர் கல்வி சீரழிந்து வருகிறது. கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்தப் பேராசிரியை, மாணவிகளுடனான உரையாடலில் தமிழக ஆளுநரின் பெயரையும் குறிப்பிடுகிறார்.
இந்த விவகாரத்தில் ஆளுநரும் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், அவரே ஒரு விசாரணைக் குழுவை அமைப்பது ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மேலும், தனது அதிகார வரம்புக்கு மீறி அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகங்களுக்கு வெளி மாநிலத்தினரை துணைவேந்தர்களாக ஆளுநர் நியமித்திருக்கிறார்.
இதுபோன்ற காரணங்களால் தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.