சென்னை: ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்களிடம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
ஜெயலலிதாவின் உடல் வைஷ்ணவ அய்யங்கார் சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்யவில்லை. எனவே ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து வைஷ்ணவ சம்பிரதாயபடி அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கும் வகையில் மரபணு சோதனை நடத்தவும் உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பொழுது அவரது ரத்த மாதிரியை ஆஸ்பத்திரி நிர்வாகம் எடுத்து வைத்துள்ளதா? அதைக் கொண்டு தற்பொழுது மரபணு சோதனை செய்ய முடியுமா?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அத்துடன் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி தங்கள் வசம் உள்ளதா என்பது குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்களிடம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு வியாழன் அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்களிடம் இல்லை என தெரிவித்து உள்ளது. அதேபோல், ஜெயலலிதாவின் திசு மாதிரிகளும் தங்களிடம் இல்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.