தமிழகமே போராட்டக் களமாக மாறியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு அளித்துப் பேசியது:
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்துக்குத் திமுக துணை நிற்கும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் அனைவரையும் சந்தித்துள்ளேன். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 10 நாள்களாக நடத்தி வருவதால் பலர் உடல் நலிவுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான் இங்கு வந்த நேரத்தில்கூட இரு சகோதரிகள் மயக்கமுற்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது 110-ஆவது விதியைப் பயன்படுத்தி, ""உங்களுடைய போராட்டத்தை நிறுத்துங்கள், உங்களுடைய கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம்'' என்று பேரவையில் ஜெயலலிதா கூறினார். ஆனால், அந்த உறுதிமொழி இதுவரையிலும் காப்பாற்றப்படவில்லை.
இன்றைக்கு தமிழகமே ஒரு போராட்டக்களமாக மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தொடர்ந்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் இந்த ஆட்சியில் நடைபெற்று வருகின்றன.
ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள ஆட்சி நடத்துகிறார்களே தவிர மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உங்களுடைய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவாதிப்பேன். உங்களின் போராட்ட உணர்வுக்கு பாராட்டுகள். ஆனால், தங்களை தாங்களே வேதனைப்படுத்திக் கொள்ளும் இந்த நிலை நிச்சயம் வேதனைக்குரியது என்றார்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, பொன்முடி, சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.